Monday, May 2, 2022

ஏது பிழை செய்தாலும்....

 திருப்போரூர்     சிதம்பர சுவாமிகள் அருளிய ஞானத் தமிழ்பாக்கள்

நாயேனுன் சீரடிக்கு நன்கல்ல செய்தாலும்
பேயேன் இழைத்த பெரும்பிழையை ... நீயே
பொறுத்தாள்வ துன் கடனாம் போரூரா! என்னை
ஒறுத்தா லெனக்கார் உறவு.

இல்லறத்தான் அல்லேன் இயற்கைத் துறவியல்லேன்
நல்லறுத்து ஞானியல்லேன் நாயினேன் ... சொல்லறத்தின்
ஒன்றேனும் இல்லேன் உயர்ந்ததிருப் போரூரா!
என்றேநான் ஈடேறு வேன்.

ஐம்பொறியாற் போகம் அயின்றாலும் நாயேனுன்
செம்பதுமத் தாளிணையே சிந்திக்க ... உம்பருக்குங்
காணஅரி தாம் இன்பங் காணத்தென் போரூரா!
பூண அருளே புரி.

ஏதுபிழை செய்தாலும் ஏழையே னுக்கிரங்கித்
தீது புரியாத தெய்வமே! ... நீதி
தழைக்கின்ற போரூர்த் தனிமுதலே நாயேன்
பிழைக்கின்ற ஆறுநீ பேசு.

பேய்போம் துயரம்போம் பித்தம்போம் போகாத
நோய்போம் மிடிபோம் நுவலுங்கால் ... தாய்போல
நன்னிதியைப் போல நயந்ததிருப் போரூரன்
சன்னிதியைக் கண்டளவே தான்.

திருவடிக்கே தோன்றுஞ் சிறியேன் துயரம்
ஒருவருக்குந் தோன்றா தென்னுள்ளே ... சருவிஎனை
எந்நாளும் வாட்டும் இடர்களையப் போரூரா
நன்னாளிந் நாளா நயந்து.

ஆசையும் அன்பும் அபிமான மும் உனது
பூசையிலே வைக்காது பொய்க்காளாய்ப் ... பேசரிய
பெண்ணாசை யாதி பிடித்துழன்றேன் போரூரா!
எண்ணாது நின்னை யிருந்து.

நோயுற் றடராமல் நொந்துமனம் வாடாமற்
பாயிற் கிடவாமற் பாவியேன் ... காயத்தை
ஓர்நொடிக்குள் நீக்கியெனை யொண்போரூர் ஐயாநின்
சீரடிக்கீழ் வைப்பாய் தெரிந்து.

கன்றழைக்கும் முன்னே கருதிவரு மாப்போல
நின்றழைக்கும் நாயேற்கு நேர்தோன்றி ... ஒன்றினுக்கும்
அஞ்சாதே வாவென் றழைப்பாய்தென் போரூரா!
எஞ்சாத பேரருளா லின்று.

ஆறுமுகம் வாழி! ஆறிரண்டு தோள்வாழி!
தேறுபதம் வாழி! யிரு தேவிமார் ... வீறுபுடை வாழி.
வேல் வாழி! மயில் வாழி! போரூரர் வாழி!
சகம் வாழி! மகிழ்ந்து.


go to top

No comments:

Post a Comment